Header Ads

பெண்களை எப்படி மடக்கலாம்?? யாழ் இளைஞன் சஞ்ஜையின் ஐடியாக்கள் இதோ!!

 


பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க பெண்களை எப்படி அணுகுவது என்பது பற்றி எழுதியிருக்கின்றேன். இராணுவ இரகசியங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்றாலும் வேறு வழியின்றி இங்கு இதை தெரியப்படுத்துகின்றேன் 😌

சரி.. விடயத்திற்கு வருவோம். எல்லோருக்கும் இந்த விடயம் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம்தான். ஆனால் ஒரு தடவை ஒரு பெண்ணை உற்றுப் பார்க்கத் தொடங்கி விட்டால் விட மாட்டீர்கள். அவர்களின் கண்கள் மொழி பேசும், அதே கண்கள் சில சமயம் முறைத்தும் பார்க்கும். வெட்கப்படும் போது கன்னம் திடீரென சிவக்கும். இதழ்கள் துடிக்கும். எதை ரசிப்பது என தெரியாமல் திக்குமுக்காடி போவீர்கள்.
பெண்கள் உங்களை எடை போடுவார்கள், ஏதாவது தப்பாக நினைப்பார்கள் என எதுவும் நினைக்காதீர்கள். பெண்களும் நம்மைப் போலவே எல்லா லூசுத்தனங்களும் நிரப்பப்பட்ட ஆனால் எம்மை விட அதிகம் அன்பால் நிறைந்த ஒரு Human being என தெரிந்து கொள்ளுங்கள். மேலும் பெண்களை ஒரு சக ஆளுமையாக பாருங்கள். ஒரு விந்தையான பிறவியாகவோ, அல்லது புனிதமான உறவாகவோ பார்க்காதீர்கள். பெண்கள் கிண்டல் செய்வார்கள் என பயப்படாதீர்கள். கிண்டல்தான் செய்யட்டுமே, அதன் போது தான் அவர்கள் எமக்கு இன்னும் இன்னும் அழகாகத் தெரிவார்கள்.
இப்படி இயல்பாக அணுகிப் பாருங்கள், அப்போது நீங்கள் கொள்ளும் தயக்கத்தை விட அவள் கொள்ளும் தயக்கங்கள் மிக மிக அதிகமாகும். சமூகத்தைப் பொறுத்த வரையில் உங்களுக்கு இருக்கக் கூடிய சுதந்திரத்தை விட அவளுக்கு இருக்கக் கூடிய சுதந்திரம் மிகவும் குறைவு தான். அதனால் பெண்ணை காதலுக்காக, காமத்துக்காக என்றெல்லாம் மனம் கொண்டு அணுகாமல் ஒரு சக ஆத்மாவாக அணுகினால் இரண்டு மட்டும் அல்ல மூன்று, நான்கு என பல தோழிகளுடன் நீங்கள் வலம் வரலாம்.
உங்களுக்கென ஒரு காதல் இல்லை என்ற காரணத்துக்காக மட்டும் எல்லா பெண்களிடமும் சென்று உங்கள் காதலை, ஆசைகளை திணிக்காதீர்கள். மற்றும் உங்களுக்குள் இருக்கும் காதலை ஏற்காதவரிடம் விரட்டி சென்று உங்களையும் உங்கள் காதலையும் காயப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு காதலில் நம்பிக்கையோ அல்லது ஒரு வித ஈர்ப்போ அல்லது விருப்பமோ எதுவும் இல்லையெனில் தேடி வரும் காதலையும் ஏற்காதீர்கள்.
சரி… ஒரு பெண்ணில் உங்களுக்கு அளவு கடந்த ஈர்ப்பு ஏற்படுகின்றதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் உடனே போய் அவளிடம் உங்கள் அன்பை அல்லது ஈர்ப்பைக் கொட்டித் தீர்க்காதீர்கள். அந்தக் காதலை உங்களுள்ளேயே சில காலம் தங்க விடுங்கள். அதில் திளைத்திருங்கள். துணை அருகில் இல்லாதவரை காதல் கொள்ளை அழகு தரும், தூரத்து நிலா போல்! அதை ரசித்திருங்கள். கொண்டாடுங்கள். ஏனெனில், பெண்ணுடனான காதலும் காமமும் மொட்டவிழ்ந்து பூவாகுதல் போல் தானாக நிகழ வேண்டும். புகை போட்டு பழுக்க வைப்பது போலெல்லாம் தொந்தரவு கொடுத்து நிகழ்த்த முடியாது. இயல்பாகவே எல்லா பெண்களிடமும் பழகுங்கள். காதலோ, காமமோ எதுவாகினும் நீங்கள் எதிர்பார்க்காத தருணத்திலிருந்து தான் சாத்தியப்படத் தொடங்கும்.!
எனது சிறு வயதில் நான் கவனித்த விடயம், பலர் குறித்த ஒரு பெண்ணை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து தம் அன்பை, அல்லது Interest ஜ அல்லது நேரடியாக காதலையே வெளிப்படுத்துவார்கள். பட், எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏனெனில் அவர்களது எந்த ஈடுபாடும் உங்கள் மீது இல்லாத போது நீங்கள் அவர்களை அளவு கடந்து தேடிப் போனால், அவர்களுக்கு உங்கள் மேல் சற்று இளக்காரம் ஏற்படலாம். உண்மையில் அந்த பெண்ணை உங்களுக்குப் பிடித்திருந்தால், அவள் உங்கள் காதலை மதிக்கத் தொடங்கும் வரை, அவளை நீங்கள் காயப்படுத்திடக் கூடாது என்ற விருப்பத்தோடு மட்டும் பழகுங்கள். இத்தனை காலமாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் அவளிடம் உங்களால் பழகிவிட முடியும் என்றானபின், உங்கள் காதலோ அல்லது வேறேதும் Request ஓ அந்த பெண்ணால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்படும்.
குறித்த அந்த பெண் உங்களிடம் நெருங்கும் தருணத்தை நீங்கள் திட்டமிட்டிருக்கமாட்டீர்கள். அவளும் யோசித்திருக்க மாட்டாள். ஒரு புள்ளியில் இணையும் கோலம் போல் திடீரென தானாக எல்லாம் அமையும். மழைக்காக மரத்தில் வந்து நிற்கும் பறவைக்கு அந்த மரமே பின்னாளில் கூடாக ஆகிவிடுவது போல், பெரும்பாலும் அந்த உறவு உங்களுடன் வாழ் நாள் முழுக்க தொடரும்.
அதுவரை பொறுத்திருங்கள். வலிந்து திணிப்பதற்கு பெயர் காதலோ காமமோ அல்ல. அதாவது; உறவுகள் பொறுத்திருந்து கொண்டாடப்பட வேண்டியவையே அன்றி அலுத்ததும் விட்டுச் செல்பவை அல்ல.

No comments

Powered by Blogger.