Header Ads

வார இறுதி பொது முடக்கம் இல்-து-பிரான்ஸில் இல்லை!



பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் வார இறுதி நாள் பொதுமுடக்கத்தை பிரதமர் இன்று அறிவிக்கவில்லை.
நாட்டின் வடக்கு கடலோர மாவட்டமான பா-து-கலே (Pas-de-Calais) பகுதிக்கு மட்டுமே வார இறுதி நாள்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு இரு தினங்கள் அமுலாக்கப் படுகின்ற பொது முடக்கத்தில் பாரிஸ் பிராந்தியம் இந்த வாரம் உள்ளடக்கப் படவில்லை.
இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. அங்கு வார இறுதி பொதுமுடக்கத்தைக் கொண்டுவருவது தொடர்பில் உள்ளூர் மக்கள் பிரதிநிதி களுக்கும் அரசுக்கும் இடையே முரண் பட்ட கருத்துகள் பரிமாறப்பட்டு வருவது தெரிந்ததே.
பாரிஸ் பிராந்தியம் உட்பட தீவிர கண்காணிப்பில் உள்ள 20 மாவட்டங் களுடன் மேலும் புதிதாக மூன்று மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் Jean Castex இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார். Hautes-Alpes, Aisne, Aube ஆகிய மூன்றுமே புதிய மாவட்டங்கள் ஆகும்.
மொத்தம் 23 தீவிர தொற்று மாவட்டங் களிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இந்த வார இறுதியில் தீவிரமாக முன்னெடுக்க கப்படவுள்ளன என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பாரிஸ் உட்பட இந்த மாவட்டங்களில் பத்தாயிரம் சதுர மீற்றருக்கு மேல் (10,000 m2) பரப்பளவு கொண்ட வர்த்தக மையங் கள்(centres commerciaux non alimentaires) மூடப்படவுள்ளன என்ற புதிய கட்டுப்பாட்டையும் பிரதமர் இன்று வெளியிட்டிருக்கிறார். தற்சமயம் நாடெங்கும் 20 ஆயிரம் சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட வர்த்தக மையங்கள் மூடப்பட்டிருப்பது தெரிந்ததே.
இதேவேளை, பிரான்ஸில் அடுத்து வரும் வாரங்களில் 50 வயதுக்கு மேற்பட்டோர் தங்களுக்கான வைரஸ் தடுப்பூசியை மருந்தகங்களில் ஏற்றிக்கொள்ள முடியும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
மருந்தகங்களில் தடுப்பூசி ஏற்றும் வசதி மார்ச் 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று பிரதமர் தெரிவித்தார். ஏனைய தடுப்பூசிகள் போன்று வைரஸ் தடுப்பூசிக்கும் மருத்துவரது சிபாரிசு அவசியமாகும். அது தொடர்பான நடைமுறைகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


-

No comments

Powered by Blogger.